தொடக்கக் கூட்டுறவு சங்கங்களுக்கு ரூ.80 கோடி: ஜெயலலிதா
வேளாண் இயந்திரங்களை கொள்முதல் செய்ய 400 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு ரூ.80 கோடி மானியம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
மண்வள சீர்கேடு, குறைந்து வரும் நீர்வள ஆதாரங்கள், கிராமப்புறங்களில் வேளாண் தொழிலுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளுக்கு போதிய முதலீடு அளிக்காதது, புது உத்திகளைப் பயன்படுத்தாமை, போதிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளாத நிலை மற்றும் இடுபொருட்களின் விலையேற்றம் ஆகியன ஏற்பட்டுள்ளன.
இதனை அறிந்த முதல்வர் ஜெயலலிதா, அந்தப் பிரச்னைகளைக் களைய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
தமிழகத்தில் தொழில் வளர்ச்சி பெரிய நகரங்கள் மட்டுமின்றி, சிறிய நகரங்களிலும் வளர்ந்து வருகிறது. பெரும்பாலான விவசாயத் தொழிலாளர்கள் தொழில் சார்ந்த லாபகரமான வேலையைச் செய்ய நகரங்களுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர்.
இதன் காரணமாக, விவசாயத்துக்குத் தேவையான வேலையாட்கள் இல்லாத நிலை தமிழகம் முழுவதும் ஏற்பட்டுள்ளது. மேலும் பயிர் செய்வதற்கான உற்பத்திச் செலவுகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.
இந்தக் காரணங்களால் எதிர்காலத்தில் உணவு உற்பத்தி பாதிக்கப்படாமல் இருப்பதற்காக, வேளாண் இயந்திரங்களைக் கொள்முதல் செய்ய ஒவ்வொரு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கும் மானியமாக ரூ.20 லட்சம் வழங்கப்படும்.
அதன்படி, 400 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு ரூ.80 கோடி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கொள்முதல் செய்யப்படும் வேளாண் இயந்திரங்கள் குறைந்த வாடகையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
இதன்மூலம், விவசாயிகள் அதிக வேலையாட்கள் தேவையின்றி, இயந்திரங்கள் மூலம் அதிக சிரமம் இல்லாமல் விவசாயப் பணிகளை விரைவாகச் செய்ய முடியும். நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துவதனால் குறைந்த நிலப்பரப்பில் அதிக அளவு உணவு உற்பத்தி
கிடைக்க வழிவகுக்கும் என்று தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment